ட்விட்டருக்கு போட்டியாக பேஸ்புக் புதிய செயலி

ட்விட்டர் சமூக தளத்திற்கு போட்டியாக பேஸ்புக் உரிமை நிறுவனமான மெடா புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய செயலி நாளை (06) வெளியிடப்படவுள்ளது.

த்ரீட்ஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த செயலி ட்விட்டரை ஒத்த அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது “எழுத்து அடிப்படையிலான உரையாடல் செயலி” என்று மெடா குறிப்பிட்டுள்ளது.

மெடா தலைவர் மார்க் சுகர்பேர்க் மற்றும் ட்விட்டர் உரிமையாளர் இலொன் மஸ்க் இடையிலே நீடிக்கும் மோதலின் தொடர்ச்சியாகவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த மாதம் இருவரும் நேரடியாக சண்டையிட இணங்கிய நிலையில் இருவரது மோதல் எந்த அளவு தீவிரமானது என்பது தெளிவின்றி உள்ளது.

இந்த த்ரீட்ஸ் செயலி பற்றி ட்விட்டரில் பதிலளித்திருக்கும் மஸ்க், “நல்லவேளை அவர்கள் புத்திசாலித்தனமாக செயற்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக பயனர்கள் வாசிக்க முடியுமான ட்விட்களின் எண்ணிக்கையில் ட்விட்டர் நிறுவனம் கட்டுப்பாடு கொண்டுவந்தது. இதன்படி அங்கீகரிக்கப்பட்ட பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ட்விட்களை பார்க்க முடியும் என்றும் ஏனையவர்களுக்கு 1000 ட்விட்களை பார்க்க முடியும் எனவும் கட்டுப்பாடு கொண்டுவந்தது. இந்நிலையில் ட்விட்டர் பயனாளர்களை ஈர்க்கும் விதமாக அதேபோன்ற வசதிகளுடன், கூடுதலாக சில சிறப்பம்சங்களை கொண்டதாக த்ரீட்ஸ் செயலி அமையவுள்ளது.


Add new comment

Or log in with...