எதிரணி செயற்பட்ட விதம் மிக்க கவலையளிக்கின்றது

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மாற்றுவழி இல்லாதவர்கள் இப்போதாவது வாயைப் பொத்திக்கொண்டு அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, ஐ.தே.கவின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர  அபேவர்த்தன தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்புக்கான வாக்களிப்பின்போது எதிர்க்கட்சி உட்பட சிலர் நடந்துகொண்ட விதம் கவலையளிப்பதாகவும், இதுதொடர்பில் நாட்டு மக்கள்கவலையடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பு திட்டத்தை எதிர்த்தவர்கள் வேறு ஏதாவது தீர்வுகள் இருந்தால் நாடு வீழ்ச்சியடையாமல் மீட்சிபெறுவதற்காக முன்வைக்க முடியும் எனக்குறிப்பிட்டுள்ள அவர், அவ்வாறு திட்டங்கள் இருந்தால் அதற்காக பாராளுமன்றத்தில் நிதி அதிகாரத்தையும் உபயோகப்படுத்தியிருக்க முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் தனியொரு ஆசனமாக இருந்த ரணில் விக்கிரமசிங்க வெறும் வாய்ச்சொல்லால் மட்டுமன்றி அதிரடி செயற்பாடுகளினால் நாட்டை கட்டியெழுப்ப உழைத்தார். அந்தவகையில் வீதிகளில் போஸ்டர் அடித்து நாட்டு மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாதென்பதை சம்பந்தப்பட்டவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.தே.க தலைமையகமான ஶ்ரீகொத்தவில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

(லோரன்ஸ் செல்வநாயகம்)

 


Add new comment

Or log in with...