பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்

நுவரெலியா – ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்தை நேற்று முன்தினம் (26) இரவு இருநூறுக்கும் அதிகமான மக்கள் சுற்றி வளைத்தனர்.இதையடுத்து பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம்  செய்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஹங்குரன்கெத்த, தியதிலகபுர பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்ற தாக்குதலில், காயமடைந்த ஒருவர், கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் ஹங்குராங்கெத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்தனர்.

எனினும், இச்சம்பவம் கொலையென்றும், சந்தேக நபர்களை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தே, இந்த பதற்றமான சூழ்நிலை உருவாகியது. இந்த மரணம் தொடர்பில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்ட போதிலும், குழு ஒன்று ஹங்குரன்கெத்த பொலிஸ் நிலையத்துக்குள் நுழைய முயற்சித்தது.

பொலிஸ் நிலையத்துக்குள் நுழைந்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும், பணியிலிருந்த அதிகாரிகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, நிலைமையைக் கட்டுப்படுத்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் 38 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஹங்குரன்கெத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் 08 சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(ஹற்றன் சுழற்சி நிருபர்)


Add new comment

Or log in with...