இரு வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இருவர் உயிரிழப்பு

பாணந்துறை மற்றும் அம்பலாங்கொடை பகுதிகளில் இடம்பெற்ற இரு வேறு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று மு.ப. 8.00 மணியளவில் பாணந்துறை, பிங்வத்தை பகுதியில் டிட்மன் சில்வா வீதியில் இத்துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிசொகுசு ஜீப் வண்டி ஒன்றில் துப்பாக்கிப்பிரயோகத்திற்கு உள்ளான நிலையில் குறித்த நபர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட நபர் கடவத்தை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் டிட்மன் சில்வா மாவத்தையில் புதிய வீடொன்றை நிர்மாணித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார், பாணந்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூடு
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, குலிகொட, ரொன்னதுவ பிரதேசத்தில் இன்று (28) மு.ப. 9.00 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ரி56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 42 வயதான சுதத்சிறி எனும் நபரே இவ்வாறு பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

தனது மனைவியை அவரது அலுவலகத்தில் இறக்கிவிட்டு வீடு திரும்பும் போதே அவர் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...