- 2015.01.08 - 2019.11.16 காலப் பகுதி பழிவாங்கல் ஆராய்வு
- 11 மாதங்கள் விசாரணை
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் அறிக்கையை கையளித்தார்.
மூன்று பேர் கொண்ட இந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு 2020 ஜனவரி 09 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு, FCID, CID மற்றும் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவு ஆகிய நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் காரணமாக 2015 ஜனவரி 08 முதல் 2019 நவம்பர் 16 வரை அரசியல் பழிவாங்கலினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பின்னணி குறித்து விசாரணை செய்யும் பொறுப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
பாரிய மோசடிகள், ஊழல், அரச வளங்களை தவறாகப் பயன்படுத்துதல், சலுகைகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து ஆணைக்குழு விரிவாக விசாரணை நடத்தியுள்ளது.
செய்தித்தாள் விளம்பரத்தின்படி கிடைக்கப்பெற்ற 1971 முறைப்பாடுகள் விசாரணைக்காக சமர்ப்பிக்கப்பட்டன. இவ்வறிக்கை 03 தொகுதிகள் மற்றும் 2,043 பக்கங்களை கொண்டுள்ளது.
3 பேர் கொண்ட ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களான ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தயா சந்திரசிறி ஜயதிலக, ஓய்வு பெற்ற பொலிஸ் மாஅதிபர் சந்திரா பெர்னாண்டோ, ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ள் வீரசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, மற்றும் ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோர் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.
Add new comment