ஊரடங்கு தொடரும்; புத்தாண்டை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுப்படுத்துங்கள்

ஊரடங்கு தொடரும்; புத்தாண்டை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுப்படுத்துங்கள்-Curfew-Continue-in-Hish-Risk-Area-Will-be-Lifted-on-Apr-14-in-Other-Districts-Limit the Tamil Sinhala New Year Only within Family Members

ஏப்ரல் 14 தளர்த்தி பிற்பகல் 4.00 மணிக்கு அமுல்
- இடர் மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு அமுல்

கொரோனா தொற்று தொடர்பில் இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

ஏனைய அனைத்து (19) மாவட்டங்களிலும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை (09) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு, நாளை பிற்பகல் 4.00 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்படும்.

இம்மாவட்டங்களில் மீண்டும் செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 14, காலை 6.00 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் மாலை 4.00 மணி முதல் மீண்டும் அமுல்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதனால் ஏற்படும் கஷ்டங்களை தெளிவுடனும் பொறுப்புடனும் பொறுத்துக்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

புத்தாண்டு சம்பிரதாயங்கள்
மேலும் புத்தாணடு காலப்பகுதியில் சம்பிரதாயங்கள் மற்றும் தொடர்புகளை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக வழங்களை மேற்கொள்ள அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

எந்த மாவட்டத்திலாயினும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலை தோட்டங்கள், ஏற்றுமதி பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும். எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...