சிறுவர்களை அடிமைப்படுத்தி பணிகளில் அமர்த்தும் இடங்களைக் கண்டறிய மேல் மாகாணத்தில் இன்று (27) முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையுடன் இணைந்து, இது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சிறுவர்களை அடிமைப்படுத்தும் தனிநபர்கள் மற்றும் குழுவினர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.
சட்ட ரீதியாக பாதுகாப்பு வழங்க வேண்டிய வயதெல்லைக்குட்பட்ட சிறுவர்களை, வீட்டு வேலைகள், கூலித் தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் அமர்த்துவோர் தொடர்பில் 1929 எனும் அவசர தொலைபேசி மூலம் அழைத்து தெரியப்படுத்தலாம் என, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது.
இதேவேளை கடந்த 6 மாதங்களில் 4,740 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment