கிளிநொச்சி விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி

- மற்றுமொரு கான்ஸ்டபிள் காயம்

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொரு பொலிஸ் கான்ஸ்டபிள் படுகாயமடைந்துள்ளார்.  

ஏ- 09 வீதியில் 55ஆவது சந்தியில் நேற்று (29) மாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்றும், வவுனியா நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் மோதி விபத்திற்குள்ளானது. இதன்போது யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மற்றுமொரு டிப்பர் வாகனத்தின் கீழ் மோட்டார் சைக்கிள் சென்ற நிலையில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்து, கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக,  பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் மய்லகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்தவரும் கிளிநொச்சி விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிளான 32 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை,  மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் இருந்து வந்த மற்றுமொரு  பொலிஸ் கான்ஸ்டபிள் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.  

இவ்விபத்தை தொடர்ந்து 02 டிப்பர் வண்டிகளின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில், கிளிநொச்சி பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(சு)


Add new comment

Or log in with...