பல்வேறு போதைப்பொருட்கள், போதை மாத்திரைகள் மீட்பு
ஹிங்குரக்கொட ஹோட்டல் ஒன்றில் பேஸ்புக் மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட இரவு நேர விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட 89 பேர் பல்வேறு போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஆறு பெண்கள் உள்ளடங்குவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட குறித்த பெண்கள், கண்டி, குருநாகல், அநுராதபுரம், திருகோணமலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
நேற்று (02) இரவு குறித்த ஹோட்டலில் பேஸ்புக் மூலம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இரவு நேர விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட குறித்த சந்தேக நபர்களிடமிருந்து கேரள கஞ்சா, அபின், ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் வேறு சில போதை மாத்திரைகளும் மீட்கப்பட்ட நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சந்தேக நபர்களிடமிருந்து ஒரு இலட்சத்து 28 ஆயிரம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை இன்றைய தினம் (03) ஹிங்குரக்கொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ருவன் குணசேகர தெரிவித்தார்.
Add new comment