- இரு இந்தியர்கள் வைத்தியசாலையில்
- நாட்டை விட்டு தூர கொண்டு செல்ல நடவடிக்கை
- தீயணைப்பு பணியில் கடற்படை, விமானப்படை
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பிடித்துள்ள X-Press Pearl எனும் இரசாயனப் பொருட்களை தாங்கிய கப்பலில், தீயின் காரணமாக வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக, சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கப்பலின் பணிக்குழுவைச் சேர்ந்த 25 பேர் அதிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக, இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்டுள்ளவர்களில் இரு இந்தியர்கள் காயமடைந்துள்ளதோடு, அவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபை
இதேவேளை, தீ விபத்து மற்றும் வெடிப்பு சம்பவம் காரணமாக, கப்பலில் இருந்த 8 கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளதாக, சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனீ லஹந்தபுர தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பில் தொடர்ந்தும் தாங்கள் கண்காணித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சிங்கப்பூர் கப்பல்
சிங்கப்பூருக்குச் சொந்தமான, 37,000 தொன் எடை கொண்ட X-Press Pearl கப்பலானது, 1,486 கொள்கலன்களுடன் பயணித்த நிலையில் இவ்வாறு தீப்பிடித்தது.
கப்பல் தீப்பிடித்தது
கொழும்பு துறைமுகத்திற்கு அருகே, கடந்த மே 19 ஆம் திகதி தீப்பிடித்த குறித்த கப்பலின் தீயை அணைக்க, குறித்த கப்பலுக்கு உரித்தான சிங்கப்பூர் நிறுவனத்தினால் தீயணைப்பதற்கான கப்பல் அனுப்பி வைக்கப்பட்டதோடு, இலங்கை கடற்படை மற்றும் வான்படை ஆகியனவும் இப்பணியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வந்தன.
தீயணைப்பு பணி
இதனைத் தொடர்ந்து தீ ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் அது மீண்டும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்தே இவ்வாறு வெடிப்பு சம்பவமும் பதிவாகியுள்ளது.
விமானப்படை ஹெலிகொப்டர்
தீயை அணைக்கும் பணியில், இலங்கை விமானப்படையின் Bell-212 வகை ஹெலிகொப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது. வானிலிருந்து தீயணைப்பு இரசாயனம் பயன்படுத்தி குறித்த பணிகள் இடம்பெற்று வருவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டை விட்டு தூர எடுத்துச் செல்லும் பணி
தற்போது, குறித்த கப்பலை இலங்கையிலிருந்து 50 கடல் மைல் எல்லைக்கு அப்பால் கொண்டு செல்ல நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக, இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
மீட்புப் பணி தொடர்கிறது
கப்பலில் ஏற்பட்டுள்ள தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை துறைமுக அதிகாரசபை, குறித்த கப்பலுக்கு உரித்தான சிங்கப்பூர் நிறுவனம் ஆகியன ஈடுபட்டுள்ளன.
இதேவேளை, கடந்த வருடம் செப்டெம்பரில் MT New Diamond எனும் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதோடு, அதிலிருந்த பணிக்குழுவினரை இலங்கை கடற்படையினர் காப்பாற்றியிருந்தனர். பல நாட்களாக தீயணைப்பு பணிகள் இடம்பெற்று வந்ததோடு, குறித்த தீ விபத்து காரணமாக இலங்கை கடற்பரப்பிற்கு ஏற்பட்ட சூழல் மாசு, தீயை கட்டுப்படுத்துவதற்கு இலங்கைக்கு ஏற்பட்ட செலவு தொடர்பில் சட்ட மாஅதிபரினால் குறித்த கப்பலின் உரிமையாளர்களிடமிருந்து இழப்பீடு கோரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Add new comment