தாஜ் மஹால் 6 மாதங்களின் பின் திறப்பு

தாஜ் மஹால் 6 மாதங்களுக்கு பின்னர் மீண்டும்திறக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை சமூக இடைவெளியுடன் பிரித்து அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ் மஹால் காதல் சின்னம் மூடப்பட்டது.

17ஆம் நூற்றாண்டின் முகலாய மன்னர் ஷாஜகானால் சலவை கற்கள் கொண்டு கட்டப்பட்ட தாஜ்மகால் உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்கின்றது.

கடந்த 6 மாதங்களாக தாஜ் மஹால் மூடப்பட்டு கிடந்தது. பராமரிப்பு பணிகள் மட்டும் இடம்பெற்று வந்தன.

அத்தோடு, ஆக்ராவில் தாஜ் மஹாலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை வைத்து வாழ்வாதாரத்தைநடத்தி வரும் மக்களும் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள். எனவே தாஜ் மஹாலை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து இன்று தாஜ் மஹால் திறக்கப்பட்டது.

தாஜ் மஹாலை சுற்றிப் பார்க்க உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் மீண்டும் ஆர்வம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. முதல் நாளான இன்று ஏராளமானோர் தாஜ் மஹாலுக்கு வந்தனர்.

இணையத்தளம்மூலம் தாய்வான் நாட்டைச் சேர்ந்த 160 பேர் இன்று தாஜ் மஹாலை சுற்றி பார்க்க முன் பதிவு செய்துள்ளனர். இதனால் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை சமூக இடைவெளியுடன் பிரித்து அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமும் அதிகபட்சமாக 5 ஆயிரம் பேரை தாஜ் மஹாலுக்குள் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. 2 கட்டங்களாக அவர்களை பிரித்து இடைவெளி விட்டு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தாஜ் மஹாலுக்குள் நுழையும் முன்பு கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்து கொள்ள ஒவ்வொருவரும் அறிவுறுத்தப்படுவார்கள் என,  தொல்பொருள் ஆய்வுத்துறையினர் தெரிவித்தனர்.
ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமைகளில் வழக்கம் போல தாஜ் மஹாலுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாஜ் மஹாலை தற்போது மத்திய தொழில்படை பிரிவினர் பாதுகாத்து வருகிறார்கள். அவர்கள் தாஜ் மஹாலுக்கு வரும் ஒவ்வொருவரிடமும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...