- கடந்த பாராளுமன்றத்தின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு
- பிரதமரின் அழைப்பை ஏற்று அலரி மாளிகையில் சந்திப்பு
அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்திற்கு பூரண ஆதரவு வழங்குவதாக கட்சித்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று (24) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இதன்போது, அரசாங்கத்தின் வழிகாட்டலுக்கிணங்க கொரோனா வைரஸ் ஒழிப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தை கேந்திரமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு கடந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதன்போது, வைரஸ் காரணமாக ஏற்படும் இழப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு, எதிர்காலத்தில் இடம்பெறும் பொருளாதார நிலை தொடர்பிலும் மிக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
அத்துடன் அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பது தொடர்பில் தற்போது அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நடைமுறை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அது தொடர்பில் விளக்கமளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் நுகர்வோருக்கான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் அந்தப் பொறிமுறையை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த, ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க, அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, இச்செயற்பாடுகளை முறையாக தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் வகையில், ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்துமாறு கோரினார். அத்துன் அத்தியாவசியமற்ற அரசாங்க ஊழியர்களின் விடுமுறையை மேலும் நீடிக்குமாறு யோசனை ஒன்றையும் முன்வைத்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, அரசாங்கத்தின் செயற்பாடுகள் பாராட்டுக்குரியது என்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைத்து, மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. மீன் உற்பத்தி விற்பனை மற்றும் அதனை போக்குவரத்து செய்தல் தொடர்பில் அனுமதி வழங்கப்படாத நிலையில் அவர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் கட்சித் தலைவர்கள் இங்கு கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
அதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் மேற்படி சிக்கல்களை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அது தொடர்பில் அனைத்து பொலீஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
இதன்போது ஒரு சில கட்சித் தலைவர்கள் மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் யோசனை முன்வைத்த போதும் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு பதிலாக கொரோனா வைரஸ் தடுப்பு தேசிய வேலைத்திட்டத்திற்கு பங்களிப்புச் செய்வது எடுத்துக்காட்டாக அமையும் எனும் கருத்தைக் கொண்டிருந்தனர்.
இக்கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, தினேஷ் குணவர்தன, கருஜயசூரிய, ரவூப் ஹக்கீம், விமல் வீரவன்ச, பவித்ரா வன்னியாரச்சி, பி திகாம்பரம், மஹிந்த அமரவீர, மனோகணேசன், அத்துரலிய ரதன தேரர், டக்ளஸ் தேவானந்தா, சஜித் பிரேமதாஸ, தயாசிறி ஜயசேகர, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, உதய கம்மன்பில, பந்துல குணவர்தன, செந்தில் தொண்டமான், எம்.ஏ. சுமந்திரன், ரிஷட் பதியுதீன், விஜித ஹேரத், ஆகிய கட்சித் தலைவர்கள் பங்குபற்றியிருந்ததோடு, பஷில் ராஜபக்ஷவும் பங்குபற்றியருந்தார்.
அத்துடன் பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, சுகாதார அமைச்சின் செயலாளர் சந்திராணி ஜயவர்தன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜா சிங்க, பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
Add new comment