14 வயது சிறுமி துஷ்பிரயோகம்; 15 வருட சிறை விதிக்கப்பட்ட பிரதேச சபை முன்னாள் தலைவர் விடுதலை

சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அக்குரஸ்ஸை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சாருவ லியனகே சுனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு 14 வயதுச் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில், மாத்தறை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வழக்கு விசாரணைகளுக்கமைய, கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் 15 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

அத்துடன், ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 250,000 இழப்பீடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து குறித்த தீர்ப்புக்கு எதிராக சாருவ லியனகே சுனில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு தொடர்பில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளுக்கமைய, மேன் முறையீட்டு நீதிபதிகளான பி. குமரன் ரட்ணம், சம்பத் அபேகோன் ஆகிய இருவர் அடங்கிய நீதிபதிகள் குழாமினால் இன்றையதினம் (11) அவர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்


Add new comment

Or log in with...