இலகுரக உள்ளூர் பயணிகள் விமான சேவை (Sakurai Aviation) விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட போது ஏற்பட்ட விபத்தில், அதில் பயணித்த நால்வர் சிறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (27) பிற்பகல் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டான பொலிஸ் பிரிவில் கிம்புலாபிட்டிய பகுதியில் விமானத்தை தரையிறக்க விமானி நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இவ்விமானத்தில் ஒரு பெண் விமானி உள்ளிட்ட இரு விமானிகள் மற்றும் சுற்றுலா பயணி ஜோடியொன்றும் பயணித்துள்ளனர்.
இவர்கள், இரத்மலானையிலிருந்து சிகிரியா நோக்கிச் சென்று மீண்டும் கொக்கல நோக்கிப் பயணித்த வேளையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவ்வாறு அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
குறித்த நால்வரும் சிறு காயமடைந்து நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இலங்கை விமானப்படையின் குழுவொன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த புதன்கிழமை (22) இதே விமான சேவைக்குச் சொந்தமான உள்ளூர் பணிகள் விமானமொன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயாகல கடற்கரையில் அவசரமாக தரையிறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment