களுத்துறை கடற்கரையில் தரையிறங்கிய இலகுரக விமானம்

இயந்திர கோளாறால் அவசரமாக தரையிறக்கம்

தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான இலகுரக பயிற்சி விமானம் ஒன்று நேற்று களுத்துறை, பயாகல கடற்கரையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த விமானம் இரத்மலானை விமான நிலையத்திலிருந்து இயங்கும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என இலங்கை விமானப்படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அந்த விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் அவசரமாக  தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தின் போது ஒரு பயிற்றுவிப்பாளர் (விமானி) மற்றும் பயிற்சி மாணவர் ஒருவரும் விமானத்தில் இருந்துள்ளனர்.

விமானம் தரையிறங்கியதும் தகவல் அறிந்த விமானப் படையின் மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன், இதனால் எவரும் காயமடையவில்லை என்பதையும் உறுதிப்படுத்தியது.

இதனிடையே இலகுரக பயிற்சி விமானத்திற்கு சொந்தமான தனியார் நிறுவனத்தின் தொழிநுட்ப குழுவொன்று அந்த இடத்திற்கு சென்று விமானத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது.