இன்று நள்ளிரவு முதல் பொதுமக்கள் ஒன்றுகூடும் எந்தவொரு நிகழ்வுக்கும் அனுமதி இல்லையென, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
கொவிட்-19 மற்றும் டெல்டா திரிபின் பரவலின் அதிகரிப்பைத் தொடர்ந்து, குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, எதிர்வரும் செவ்வாய்கிழமை (17) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை வீடுகளிலோ, மண்டபங்களிலோ திருமண வைபங்களை நடாத்த அனுமதியில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உணவகங்களில் ஒரே தடவையில் அதன் 50% இலும் குறைந்த கொள்ளளவிலான நபர்களுக்கே அமர்ந்து உண்ண அனுமதி வழங்கப்படுமென, அவர் அறிவித்துள்ளார்.
ஆயினும் பொது இடங்களில் நடமாடுவதை முடிந்த அளவில் தவிர்க்குமாறு, அரசாங்கம் கேட்டுக் கொள்வதாக, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இதேவேளை, திருமண நிகழ்வில் கலந்து கொள்வோர் 150 இலிருந்து 50 ஆக குறைக்கப்படுவதாக, கடந்த செவ்வாய்க்கிழமை (10) அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment