இரு இராஜாங்க அமைச்சுகளில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்கான இராஜாங்க அமைச்சர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அந்த வகையில், சேதனப் பசளை உற்பத்தி மேம்பாடு, விநியோக ஒழுங்குப்படுத்தல், நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழ வகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதைகள் உற்பத்தி, உயர் தொழிநுட்ப விவசாய இராஜாங்க அமைச்சராக, சஷீந்திர ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
அத்துடன், கரையோரப் பாதுகாப்பு மற்றும் தாழ் நிலங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக, மொஹான் டி சில்வா பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதன்போது ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவும் பிரசன்னமாகி இருந்தார்.
கலாநிதி நாலக கொடஹேவா வகித்த நகர அபிவிருத்தி, கரையோர பாதுகாப்பு, கழிவுப்பொருட்களை அகற்றுதல் மற்றும் சமுதாய துப்புரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சிலிருந்து கரையோரப் பாதுகாப்பு என்ற விடயம் அகற்றப்பட்டு, அது புதிய இராஜாங்க அமைச்சாக கரையோர பாதுகாப்பு, மற்றும் தாழ்நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு எனும் புதிய இராஜாங்க அமைச்சாக நிறுவப்பட்டுள்ளது.
அத்துடன் சேதன மறறும் இயற்கை பசளை உற்பத்தி, விநியோகங்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு எனும் அமைச்சு உருவாக்கப்பட்டு, அது சஷீந்திர ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment