தடுப்பூசி வழங்கலுக்கு இடையூறு; சரணடைந்த மொரட்டுவை மேயர் கைது

தடுப்பூசி வழங்கலுக்கு இடையூறு; சரணடைந்த மொரட்டுவை மேயர் கைது-Moratuwa Mayor Arrested for Obstructing Duties of Medical Officers During Vaccination

மொரட்டுவை மாநகர சபைத் தலைவர், சமன்லால் பெனாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் (27) மொரட்டுமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள மெதடிஸ்த தேவாலயமொன்றில் கொவிட் தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது அங்கு வந்த மொரட்டுவை மாநகர சபைத் தலைவர், சமன்லால் பெனாண்டோ, தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வைத்தியர் உள்ளிட்ட அரச ஊழியர்களின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாக, அவருக்கு எதிராக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், இன்று (28) அவர் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளதாக,  பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் அரச ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் இன்றையதினம் (28) அவரை மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...