எந்தவொரு அரசியல்வாதியும் தனிமைப்படுத்தப்படவில்லை

எந்தவொரு அரசியல்வாதியும் அம்பாறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்படவில்லை என, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

ஆயினும், எந்தவொரு வெளிமாவட்டத்திலிருந்தும் அம்பாறை  மாவட்டம் கல்முனை  வருபவர்கள் அனைவரும் தம்மை சுய தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட வேண்டுமென, அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் கொரோனா பரவல் தொடர்பில் நேற்று (02) மாலை  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை, பேலியகொடை மீன்சந்தை தொடர்பில் இதுவரை 19 கொரோனா தொற்றாளர்கள் அம்பாறை பகுதியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை கல்முனை பிராந்தியத்தில் 17 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். மருதமுனை -2, கல்முனை -3, சாய்ந்தமருது -1, அக்கரைப்பற்று -1, இறக்காமம் -3, பொத்துவில் -7 பேர் என இதுவரை 17 பேர் கல்முனை பிராந்தியத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

இம்மாவட்டத்திலிருந்து பிறமாவட்டங்களுக்கு தொழில் நிமித்தம் சென்று வருபவர்கள் அல்லது அங்கு தங்கி தொழில் புரிபவர்கள் அல்லது வெளிமாவட்டங்களைச் சேர்ந்த அரச, தனியார் மற்றும் சுயதொழில் புரிபவர்கள், அல்லது பிற மாவட்டத்தில் வசிக்கும் இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்திருந்தால் எவராக இருந்தாலும் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அம்பாறை மாவட்டத்தின்  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில்  பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து,  சமூக இடைவெளி போன்ற சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வாறு இம்மாவட்டத்திற்குள் வருகை தந்தவர்கள் தமது விபரங்களை பொதுச் சுகாதார பரிசோதகர் அல்லது பொலிஸ், அல்லது பிரதேச செயலாளர் அல்லது தமது கிராம சேவை உத்தியோகத்தர்களிடம் தெரிவித்து இரண்டு வாரங்கள் வீடுகளுக்குள்ளே தனிமைப்படுத்தலில் இருந்து கொள்ளுமாறும் இக்காலப்பகுதிக்குள் தமக்கு ஏதாவது நோய்த் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் எந்தவொரு அரசியல்வாதிகளும் அம்பாறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்படவில்லை அவர் மேலும் தெரிவித்தார்.

(பாறுக் ஷிஹான்)


Add new comment

Or log in with...