புராதன பெறுமதி இல்லை என்கிறார் குருணாகல் மாநகர மேயர்
வரலாற்று பெறுமதி கொண்ட குருணாகல் புவனேக ஹோட்டல் இடிக்கப்பட்டமை சம்பந்தமாக நிபுணர்களைக் கொண்ட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (14) குறித்த கட்டடம் அழிக்கப்பட்டமை தொடர்பில், விரைவாக விசாரணை செய்வதற்காக பிரதமரும், கலாசார மற்றும் புத்தசாசன அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் 5 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக்குழு அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (17) நியமிக்கப்பட்ட இந்தக்குழுவின் அங்கம் வகிப்பவர்கள்
1. பேராசிரியர் செனரத் திசாநாயக்க , தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் (தலைவர்)
2. ஆர்.எம்.ஆர். ரத்நாயக்க, குருணாகல் மாவட்ட செயலாளர் (அங்கத்தவர்)
3. பேராசிரியர் ரி.ஜீ. குலதுங்க, தொல்பொருள் ஆய்வாளர் (அங்கத்தவர்)
4. பிரசாத் ரணசிங்க, கலாச்சார மற்றும் புத்தசாசன அலுவல்கள் அமைச்சின், பிரதிப் பணிப்பாளர், தொல்பொருள் ஆய்வாளர் (அங்கத்தவர்)
5. திருமதி. சுமேதா மாதொட்ட, மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர் (அபிவிருத்தி), கட்டட வடிவமைப்பாளர் (அங்கத்தவர்)
தகர்த்து அழிக்கப்பட்ட குறித்த கட்டடம் 13 ஆம் நூற்றாண்டில் குருணாகல், யாப்பஹுவ இராசதானி மன்னரான இரண்டாம் புவனேகபாகு காலத்திற்கு உட்பட்டதுடன், இது அக்காலப்பகுதியில் அப்போதைய அரச மண்டபம் என நம்பப்படுகின்றது. இதற்கமைவாக இந்த கட்டடம் 1940 ஆம் ஆண்டு 9ஆம் இலக்க, புராதனச் சின்ங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாகும்.
இதற்கமைவாக குறித்த சம்பவம் தொடர்பில், குறித்த நிபுணர் குழுவின் அறிக்கையை ஜுலை மாதம் 23ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பிரதமரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள குருணாகல் மாநாகர சபை முதல்வர், துஷார சஞ்ஜீவ விதாரண, குறித்த கட்டடம் புவனேக எனும் ஹோட்டல் ஒன்றின் பகுதியே தவிர அதற்கு எவ்வித புராதனப் பெறுமதியும் கிடையாது எனத் தெரிவித்தார்.
நேற்றைய தினம் (17) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்ட அவர், இதனைத் தெரிவித்திருந்தார்.
பாதை புனரமைப்புக்கு அமைய, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குறித்த கட்டடத்தையே அகற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இவ்விடயம் தொடர்பாக, அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் தலைவரும், தொல்பொருள் பணிப்பாளர் நாயகமுமான, பேராசிரியர் செனரத் திஸாநாயக்க தெரிவிக்கையில், குறித்த கட்டடத்தின் ஒரு பகுதியை உடைத்தமை விடயம் தொடர்பில் கடந்த ஜூலை 06ஆம் திகதி, தொல்பொருள் திணைக்களத்தினால் குருணாகல் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் கட்டடத்தை முற்றாக அழித்தமை தொடர்பில் குருணாகல் பொலிஸில் மற்றுமொரு முறைப்பாடொன்றை தொல்பொருள் திணைக்களம் நேற்று (17) மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.
ஆயினும் குருணாகல் பொலிஸார் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில், தொல்பொருள் திணைக்களம் பதில் பொலிஸ் மாஅதிபருக்கு, வாய் மூலமாகவும், எழுத்து மூலமாகவும் அறிவித்துள்ளது.
13ஆம் நூற்றாண்டு காலப் பகுதி 2ஆம் புவனேகபாகு மன்னனின் ஆட்சிக் காலத்துக்குரிய அரச சபையான குறித்த கட்டடம், குருணாகல், யாப்பஹுவ இராசதானிக்குரியது என்பதோடு, தொல்பொருள் திணைக்களத்திற்கு கீழ் வருகின்ற ஒரு கட்டடமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment