- விசேட நம்பிக்கையாளர் ஒருவர் நியமனம்
- முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அதிரடி நடவடிக்கை
ஹொரவப்பொத்தானை, கிவுளக்கடை நம்பிக்கையாளர் சபையை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது.
தற்போதுள்ள நாட்டின் சூழ்நிலையை கருத்திற்கொள்ளாமல், நேற்று (27) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை ஏற்பாடு செய்தமைக்கு அமைய, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையிலான தேசிய நடவடிக்கைக்கு ஒத்துழைக்கும் வகையில் இலங்கையிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களினதும் குழு ரீதியான நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு வக்பு சபையினால் கடந்த மார்ச் 15 ஆம் திகதி விடுக்கப்பட்ட உத்தரவை மீறியதற்கு அமைய, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் குறித்த பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபைக்கு விடுத்துள்ள கடிதத்த்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கிவுளக்கடை பள்ளிவாசலுக்கு விசேட நம்பிக்கையாளராக, என்.எம். அஷ்ரப் என்பவரையும் நியமிப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கிவுளக்கடை பள்ளிவாசலின் அனைத்து ஆவணங்கள் மற்றும் பள்ளிவாசலுக்கு உரித்தான அனைத்தையும் தற்போது நியமிக்கப்பட்டுள்ள விசேட நம்பிக்கையாளரிடம் ஒப்படைக்குமாறும் அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.
Add new comment