கேள்வி அதிகரித்திருப்பதை கருதி நிதியமைச்சு தீர்மானம்
இறக்குமதி செய்யப்படும் முகக்கவசங்கள், தொற்று நீக்கிகள் உள்ளிட்ட கிருமிநீக்கிகள் அனைத்திற்கும் விதிக்கப்பட்ட அனைத்து வரிகளும் இன்று நள்ளிரவு (19) முதல் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் காரணமாக சம்பந்தப்பட்ட குறித்த பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள அதிக கேள்வியை கவனத்தில் கொண்டு, நிதி அமைச்சு இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் வலுவூட்டி முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், நிதி அமைச்சர் என்ற வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் முகக் கவசம், தொற்று நீக்கிகள் உள்ளிட்ட கிருமி நீக்கிகளுக்கு இதுவரையில் அறவிடப்பட்ட சுங்கவரி உள்ளிட்ட ஏனைய வரிகள் இன்று நள்ளிரவு (19) முதல் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த இறக்குமதிப் பொருட்கள் விசேட வர்த்தக பொருள் வரி சட்டத்தின் கீழ் உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றுமுன்தினம் (16) சுகாதார அமைச்சினால் முகக் கவசங்களுக்கான உச்சபட்ச சில்லறை விலை அறிவிக்கப்பட்டிருந்தது.
மீள பயன்படுத்த முடியாத சாதாரண முக கவத்திற்கு ரூ. 50 எனவும், N95 வகை முகக் கவசத்திற்கு ரூ. 325 எனவும் உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Add new comment