நீதிபதி கைது உத்தரவு தொடர்பில் சபாநாயகரை சந்தித்தார் சட்ட மாஅதிபர்

நீதிபதி கைது உத்தரவு தொடர்பில் சபாநாயகரை சந்தித்தார் சட்ட மாஅதிபர்-AG Dappula de Livera Meets Karu Jaysuriya

அரசியலமைப்பு சபையினால் வழங்கப்பட்ட அறிவிப்புக்கு அமைய, சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்துள்ளார்.

மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவை, கைது செய்யுமாறு சட்ட மாஅதிபரினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் தொடர்பில், அரசியலமைப்பு சபை கடந்த வாரம் கூடி கவனம் செலுத்திய நிலையில், இது தொடர்பில் அவரை வரவழைக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைய, நேற்று (28) இரவு சபாநாயகர் கரு ஜயசூரியவை சட்ட மாஅதிபர் சந்தித்துள்ளார்.

இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில், அரசியலமைப்பு சபையிடம் சபாநாயகர் அறிவிப்பார் என, பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் தொடர்பில், பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவை கைது செய்வது தொடர்பான பிடியாணை உத்தரவை பெறுமாறு, கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு (CCD) சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா கடந்த வியாழக்கிழமை (23) அறிவுறுத்தியிருந்தார்.


Add new comment

Or log in with...