பரீட்சை எழுதச் சென்று விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மாணவன் நேற்று (30) திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடி முதலாம் குறிச்சி ஆலீன் அப்பா வீதியில் வசிக்கும் ஏ.பி. இன்ஸாப் (14) எனும் இம் மாணவன் கடந்த செவ்வாய்க்கிழமை (24) இரண்டாம் தவணைப் பரீட்சைக்காக பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது காத்தான்குடி பிரதான வீதியில் வைத்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனின் கதவு அதன் சாரதியினால் திறக்கப்பட்ட நிலையில் அதில் மோதுண்டு வீதியில் வீழ்ந்த நிலையில், வீதியினால் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி அவரது தலை பகுதியில் ஏறிச் சென்ற நிலையில் இவ்விபத்துச் சம்பவம் இடம் பெற்றது.
படுகாயமடைந்த குறித்த மாணவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் (30) காலை உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலையில் தரம் 09 இல் கல்வி கற்பவராவார்.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட வேனின் சாரதியான வாழைச்சேனையைச் சேர்ந்த பாடசாலையொன்றின் அதிபர் ஒருவரும் முச்சக்கர வண்டியின் சாரதியும் காத்தான்குடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(மட்டக்களப்பு குறூப் நிருபர் - ரீ.எல். ஜவ்பர்கான், புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)
Add new comment