பிரமிட்‌ திட்டங்களில்‌ ஈடுபடும் 8 நிறுவனங்களின் பெயர்கள் வெளியீடு

- சட்ட நடவடிக்கை எடுக்க சட்ட மாஅதிபரிடம் கோரிக்கை
- மத்திய வங்கி பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

சட்ட விரோமான பிரமிட்‌ திட்டங்களில்‌ ஈடுபடும் 8 நிறுவனங்களின் பெயர்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

அதற்கமைய குறித்த நிறுவனங்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் பரிசீலனை செய்யுமாறு மத்திய வங்கி விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

பிரமிட் தடை செய்யப்பட்ட சட்டவிரோதமான செயற்பாடு என்றும் சட்டத்தினால்‌ தண்டிக்கப்படக்கூடிய இத்தகைய நடவடிக்கைகளுடன் தொடர்புபடுவதன் மூலம் ஏமாற்றப்படுதல், ஏமாறுதல், அதற்கு உதவுதல் உள்ளிட்ட விடயங்களிலிருந்து விலகியிருக்குமாறு பொதுமக்களிடம் இலங்கை மத்திய வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் மத்திய வங்கி பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல் வருமாறு,

இலங்கை மத்திய வங்கிக்குக்‌ கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின்‌ பிரகாரம்‌, பின்வரும்‌ நிறுவனங்கள்‌ வங்கித்தொழில்‌ சட்டத்தின்‌ 83 (இ) பிரிவின்‌ நியதிகளுக்கமைய தடைசெய்யப்பட்ட திட்டங்களைக்‌ நடாத்துகின்றனவா ‌ அல்லது  நடாத்தியுள்ளனவா என்பதை உறுதிப்படுத்துவதற்கு, 1988ஆம்‌ ஆண்டின்‌ 30ஆம்‌ இலக்க வங்கித்தொழில் சட்டத்தின்‌ 83(இ) பிரிவிற்கமைவாக விசாரணைகள்‌ நடாத்தப்பட்டன. அதற்கமைய, இலங்கை மத்திய வங்கியானது  கீழ்‌ குறிப்பிடப்படும்‌ நிறுவனங்கள்‌ சொல்லப்பட்ட சட்டத்தின்‌ 83(இ) பிரிவின்‌ ஏற்பாடுகளுக்கு முரணாக தடைசெய்யப்பட்ட திட்டங்களை நடாத்துகின்றன அல்லது நடாத்தியுள்ளன எனத்‌ தீர்மானித்துள்ளது.

  1. Tiens Lanka Health Care (Pvt) Ltd
  2. Best Life International (Pvt) Ltd
  3. Global Lifestyle Lanka  (Pvt) Ltd
  4. Mark- Wo International (Pvt) Ltd
  5. V M L International (Pvt) Ltd
  6. Fast 3Cycle  International (Pvt) Ltd (F3C)
  7. Sport Chain App, Sports Chain ZS Society Sri Lanka
  8. Onmax DT

1988ஆம்‌ ஆண்டின்‌ 30ஆம்‌ இலக்க வங்கித் தொழில்  சட்டத்தின்‌ 83(இ) பிரிவின்‌ ஏற்பாடுகளுக்கு முரணாக திட்டமொன்றினை நேரடியாக அல்லது நேரடியற்று தொடங்குகின்ற, வழங்குகின்ற, ஊக்ருவிக்கின்ற, விளம்பரப்படுத்துகின்ற, நடாத்துகின்ற, நிதியளிக்கின்ற, முகாமை செய்கின்ற அல்லது பணிக்கின்ற எவரேனும்‌ ஆள்‌ தண்‌டனைக்குரிய தவறொன்றிற்கு ஆளாதல்‌ வேண்டும்‌.

தவறுக்கான தண்டனைகளானது, மூன்று வருடங்களை விஞ்சாத காலப்பகுதியொன்றுக்கு சிறைத்தண்டனை அல்லது  ஒரு மில்லியன்‌ ரூபாவை விஞ்சாத தண்டப்பணம்‌ அல்லது சிறைத்தண்டனை மற்றும்‌ தண்டப்பணம்‌ ஆகிய இரண்டும்‌ என்பவற்றை உள்ளடக்குகின்றன.

இத்தவறானது வேண்டுமென்று அல்லது  அறிந்துகொண்டு அல்லது  எவரேனும்‌ வேறு ஆளுக்கு சேதத்தை விளைவிக்கும்‌ அல்லது ஆபத்தாகும்‌ என்று தெரிந்து கொண்டே புரியப்படும் நிலையில், குறித்த நபருக்கு 3 வருடங்களுக்கு குறையாத அத்துடன்‌ 5 வருடங்களுக்கு மேற்படாத கடூழிய சிறைத்தண்டனைக்கு உள்ளாக நேரிடும்.

அத்துடன்‌ ரூ. 2 மில்லியன்‌ அபராதம் அல்லது திட்டத்தில்‌ பங்கேற்பாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றதாக வெளிப்படுத்தப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட இலங்கை தொகையின்‌ இரு மடங்கு, ஆகியவற்றில் எது உயர்வானதோ அதனை தண்டப்பணமாக விதிக்கப்படும்.

அதற்கமைய, சட்டத்தினால்‌ தண்டிக்கப்படக்கூடிய அத்தகைய நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது.

மேலும்‌, பிரமிட்‌ திட்டங்களை நடாத்துகின்றதாக/ நடாத்தியதாகத்‌ தீர்மானிக்கப்பட்டுள்ள மேலே பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுடன்‌ மத்திய வங்கி சில உடன்பாடுகளை எட்டியுள்ளது என்ற குறிப்பிட்ட சமூகப்‌ பிரிவினரின்‌ கூற்றை இலங்கை மத்திய வங்கி நிராகரிக்கின்றது.

அதற்கமைய, இலங்கை மத்திய வங்கியானது வங்கித்தொழில்‌ சட்டத்தின்‌ 83(இ) பிரிவின்‌ ஏற்பாடுகளின்‌ நியதிகளுக்கமைய சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் பரிசீலனை மேற்கொள்ளுமாறு சட்ட மாஅதிபரைக்‌ கோரியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி
இல. 30, ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01
தொலைபேசி: 1935 / +94 11 247 7966


Add new comment

Or log in with...