மாணவர்களின் உயர் கல்விக்கு ரூ. 8 இலட்சம் வட்டியற்ற கடன் மீள ஆரம்பம்

- நாளாந்த செலவுக்கு மேலும் ரூ. 3 இலட்சம்
- 5,000 மாணவர்களுக்கு வழங்க ஜனாதிபதி பணிப்புரை
- இசட் புள்ளி, பாடநெறியின் முக்கியத்துவம் ஆராயப்படும்
- பல்கலையிலிருந்து வெளியேறி ஒரு வருடம் வரை வழங்கப்படும்
- தொழில் கிடைத்ததும் திருப்பிச் செலுத்த வேண்டும்

உயர் தரத்தில் சித்தியடைந்த அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற முடியாத மாணவர்களுக்கு ரூ. 8 இலட்சம் கடனுதவியை மீண்டும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அது தவிர அவர்களின் தினசரி செலவுக்காக மேலும் ரூ. 3 இலட்சம் வழங்கப்படவுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடன் வட்டி விகிதங்கள் 25% அதிக பெறுமதியை எட்டியுள்ள நிலையில், வட்டியின்றி குறித்த கடனை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக 5,000 மாணவர்களுக்கு இந்த கடன் வசதி வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இலங்கை வங்கியினால் மாத்திரம் வழங்கப்படும் இந்த கடன் வசதி எதிர்காலத்தில் மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியினாலும் வழங்கப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இக்கடன் வழங்குவதில் உயர் தர இசட் புள்ளி மற்றும் எதிர்பார்க்கப்படும் பாடநெறியின் காலத்திற்கு பொருத்தமான மதிப்பு ஆகியனவும் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறி ஒரு வருடம் செல்லும் வரை குறித்த கடன் தொகை வழங்கப்படவுள்ளது.

அத்துடன் தொழில் கிடைத்தவுடன் அதனை திருப்பிச் செலுத்த முடியும் என்பதில் இதில் விசேட அம்சமாகும்.


Add new comment

Or log in with...