சந்தைக்கு சமையல் எரிவாயு விநியோகம் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

சந்தைக்கு சமையல் எரிவாயு விநியோகம் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்-Litro Gas distribution suspended until further notice

இலங்கையின் உள்ளூர் சந்தைக்கான எரிவாயு விநியோகத்தை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அமைச்சர் லசந்த அழகியவன்ன இதனை அறிவித்துள்ளார்.

சிலிண்டரில் எரிவாயு கசிவை கண்டறிவதற்காக நாற்றத்தை ஏற்படுத்தும் எதைல் மெர்கப்டன் (Ethyl Mercaptan) கொண்டிருக்க வேண்டிய அளவு 14 அலகுகளாக இருக்க வேண்டிய நிலையில், அது 5 ஆக உள்ளதால், அதனை உரிய தர நிலைக்கு பேணும் வரை இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சரர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

அதற்கமைய, நேற்று (02) முதல் மறு அறிவித்தல் வரை எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் எரிவாயு தொடர்பான சுமார் 20 வெடிப்புச் சம்பவங்கள் உள்ளிட்ட, கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல வெடிப்புச் சம்பவங்கள் தினமும் பதிவாகி வரும் நிலையில் இவ்வறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டின்எரிவாயு விநியோகஸ்தர்களான Litro Gas மற்றும் LAUGFS Gas நிறுவனங்களுக்கு எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதியினால் 8 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதோடு, பாராளுமன்ற ஆலோசனைக் குழுவொன்றும் இது தொடர்பாக கூடி ஆராய்ந்திருந்தமை விசேட அம்சமாகும்.