துறைமுக நகர சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை இன்று

பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள 19விஷேட  மனுக்கள் மீதான பரிசீலனை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

மேற்படி விஷேட மனு மீதான விசாரணைகளை மேற்கொள்வதற்காக பிரதம நீதியரசரினால் ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை இன்று முற்பகல் 10மணிக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதிபதிகளான புவனேக அலுவிஹார, பிரியந்த ஜெயவர்தன,முர்து பெர்னாண்டோ, ஜனக் டி சில்வா ஆகியோர் உள்ளிட்ட நீதிபதிகள் குழாம்  முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வுள்ளது.

பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி இதுவரை ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தரப்பினர் விசேட மனுக்கள் சிலவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

மேற்படி சட்டமூலத்தை சட்டபூர்வமாக்குவதானால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ளனர். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...