கடந்த 5 நாட்களில் 399 விபத்துகள்; 52 பேர் பலி!

கடந்த 5 நாட்களில் 399 விபத்துகள்; 52 பேர் பலி!-52 Killed in Accidents Happened in Last 5 Days

- சராசரியாக தினமும் 10 பேர் பலி
- 669 பேருக்கு காயம்
- 2,242 வாகனங்கள் பொலிஸ் கட்டுப்பாட்டில்

நாடு முழுவதும் கடந்த 5 நாட்களில் 399 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் அதில் 52 பேர் மரணமடைந்துள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி முற்பகல் 6.00 மணி முதல் இன்று (18) முற்பகல் 6.00 மணி வரையான காலப் பகுதியில் இவ்விபத்துகள் மற்றும் மரணங்கள் பதிவாகியுள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதற்கமைய சராசரியாக 10 பேர் தினமும் மரணமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், கவனயீனம், பாதுகாப்பற்ற வாகன செலுத்துகை, ஒழுக்கமற்ற சாரதிகள் காரணமாக இவ்விபத்துகளில் பெரும்பாலானவை இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் இவ்விபத்துகளில் 669 பேர் காயமடைந்துள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்விபத்துகள் தொடர்பாக 1,429 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட 2,242 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறிப்பாக போதையில் வாகனம் செலுத்தியமை, விபத்துகளை ஏற்படுத்தியமை உள்ளிட்ட காரணங்கள் தொடர்பில் குறித்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட வாகனங்கள்:

  • முச்சக்கரவண்டிகள் - 552
  • கார்கள் - 128
  • கெப் வண்டிகள்- 22
  • பயணிகள் பஸ் வண்டிகள் - 12
  • லொறிகள் - 38
  • இரட்டை பயனபாட்டு வாகனங்கள் - 28
  • வேன்கள் - 30
  • கொள்கலன் வாகனம் - 01
  • துவிச்சக்கர வண்டிகள் - 02

Add new comment

Or log in with...