உள்நாட்டு உற்பத்தி,தேசிய பொருளாதாரம் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்துகிறது

உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கும் தேசிய பொருளாதாரத்துக்குமே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், முன்னுரிமையளித்து செயற்படுமென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று (19) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானங்கள் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.  

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,  

நுகர்வோருக்கும் உற்பத்தியாளருக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. சில சந்தர்ப்பங்களில் உற்பத்தியாளர்கள் பற்றி மாத்திரமே கதைக்கின்றோம். அதேபோன்று சில சந்தர்ப்பங்களில் நுகர்வோர் பற்றி மாத்திரமே கதைக்கின்றோம். உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திக்கு அதிக விலை கிடைப்பதையே எப்போதும் எதிர்பார்க்கின்றனர். உற்பத்தியாளர்களைவிட நுகர்வோரே எமக்கு அதிகம் வாக்களிக்கின்றனர். நுகர்வோர் எப்போதும் குறைந்த விலையில் பொருட்களை பெற்றுக்கொள்ளவே எதிர்பார்க்கின்றனர்.

இரண்டு தரப்பினருக்கும் இடையில் ஒரு பிரச்சினையுள்ளது.  

இருதரப்பினரையும் பாதுகாக்கும் வகையில்தான், அரசாங்கம் வரிக்கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். அதன் பிரகாரமே, விசேட வியாபாரப் பண்டங்களுக்கான வரிமுறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேவையான நேரத்தில் குறித்த சட்டத்தை மறுசீரமைக்க முடியும் என்பதுடன், சட்டம் திருத்தப்பட்டு ஆறு மாதகாலத்திற்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.  

சுதேச உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நோக்கிலேயே விசேட வியாபாரப் பண்டங்களுக்கான வரிமுறைமை 2007ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.  

எந்தவொரு அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் இந்த நாட்டின் இலட்சக்கணக்கான விவசாயிகளை பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்புமாகும். ஆனால், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நாட்டின் தேசிய உற்பத்தியாளர்கள் பாதுகாக்கப்படவில்லை. ரிஷாட் பதியுதீன்தான் வர்த்தக அமைச்சராகவிருந்தார். தேசிய உற்பத்தியாளர்களை கவனத்தில் கொள்ளாது வெளிநாடுகளில் இருந்து பொருட்களை கொண்டுவந்து குறைந்த விலையில் கொடுத்தனர்.  

75, 80ரூபாவுக்கு இடையில் பொன்னி மற்றும் சம்பா அரிசிகளை இறக்குமதி செய்து முழு சந்தையையும் நிறைக்க முடியும். இவற்றை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய முடியும்.

வரி இல்லாது அரிசி விலையை குறைக்க முடியும். ஆனால், எமது நாட்டில் தற்போது அறுவடை காலமாகும். மண்ணுடன் முட்டி மோதும் அவர்களுக்கு கடனைக் கூட செலுத்திக்கொள்ள முடியாத சூழல் ஏற்படும். ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் ‘சுபீட்சமான நோக்கு’ என்ற கொள்கைக்கு அமைய தேசிய பொருளாதாரத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கும்.  

எத்தகைய விமர்சனங்கள் வந்தாலும், நாம் இலட்சக்கணக்கான விவசாயிகளின் பக்கம் நின்றுதான் தீர்மானங்களை எடுப்போம். மஞ்சல், கஜு, உளுந்து, மிளகு என எதனையும் இறக்குமதி செய்ய மாட்டோம். நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்தையும் உற்பத்தி செய்வதற்கான சலுகைகளை விவசாயிகளுக்கு செய்துகொடுப்போம்.  

வடக்கு, கிழக்கில் உளுந்து, சோயா, மஞ்சல் என பல உற்பத்திகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தேசிய பொருளாதாரம் வளர்ச்சியடையும் போதே, எமது நாட்டின் நிதிப்பலம் அதிகரிக்கும்.மக்களின் வாழ்க்கைத்தரமும் இதனால் உயர்வடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

(சுப்பிரமணியம் நிஷாந்தன்)   


Add new comment

Or log in with...