பங்களாதேஷ் தனது நாட்டுப் பிரஜைகளுக்கென கொவிட்19தடுப்பு மருந்தை இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளது.முப்பது மில்லியன் மக்களுக்கு வழங்குவதற்கான கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் இருந்து தருவிப்பதற்கு பங்களாதேஷ் அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக 'பிஸினஸ் ஸ்ராண்டட்' செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம், ஐரோப்பிய மருந்தாக்கல் கம்பனியான அஸ்ட்ரா ஸென்க்கா ஆகியவற்றுடன் இந்தியா இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பு மருந்தையே பங்களாதேஷ் இறக்குமதி செய்யவிருக்கின்றது. இந்தியாவிலிருந்து கொரோனா தடுப்பு மருந்தை இறக்குமதி செய்து மக்களுக்கு வழங்குதற்கான அங்கீகாரத்தை பங்களாதேஷின் மருந்து நிர்வாகத்துக்குப் பொறுப்பான பணிப்பாளர் நாயகம் (ஒருங்கமைப்பு) சலாவுடீன், பெக்ஸ்சிம்கோ ஃபாமா மருந்து நிறுவனத்துக்கு வழங்கியுள்ளார்.
"முதல் கட்டமாக எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு மாதாந்தம் ஐந்து மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பெக்ஸ்சிம்கோ ஃபாமா நிறுவனம் தற்போது தடுப்பு மருந்தை இறக்குமதி செய்ததும் முதல் கட்டமாக அரசாங்கத்தினால் சிபார்சு செய்யப்படும் தரப்பினருக்கு வழங்கவிருக்கிறது. அதன் பின்னர் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்படுகின்ற தனியார் வைத்தியசாலைகளுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படவிருக்கின்றது" என்று சலாவுடீன் தெரிவித்தார்.
Add new comment