காத்தான்குடியில் 5 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு

நேற்று முதல் அமுலாகும் என GA அறிவிப்பு

காத்தான்குடி பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் ஐந்து தினங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தெரிவித்தார். இந்த தனிமைப்படுத்தல் முடக்கம் தொடர்ந்து 5 நாட்களுக்கு அமுலிலிருக்குமென அவர் மேலும் தெரிவித்தார். நேற்று முழுநாளும் மட்டக்களப்பு நகர்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட 549 அன்டிஜன் பரிசோதனையின்போது 26 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 23 நபர்களுக்கும், ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இருவருக்கும் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

காத்தான்குடி பிரதேசத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட 665 அன்டிஜன் பரிசோதனைகளின் போது 27 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்விரு பிரதேசங்களிலுமாக காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 50 நபர்களும் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த 9 நபர்களும் உள்ளடங்குகின்றனர்.

இதற்கமைய தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் இப் பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...