முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு நாளை (13) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினராக இருந்த 2011 - 2014 காலப்பகுதியில் ரூ. 30 கோடியே 62 இலட்சம் பெறுமதியான சொத்துகளை முறையற்ற வகையில் சேகரித்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட, குறித்த வழக்கில் சஜின் வாஸ் குணவர்தன பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
சந்தேகநபருக்கு எதிராக, சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இது தொடர்பில் கடந்த மாதம் (27) விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, அவரை இன்று (12) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கிஹான் குலதுங்க உத்தரவிட்டிருந்தார்.
அதற்கமைய இன்று (12) இவ்வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது
இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் நாயகம் துசித் முதலிகேவினால் சாட்சியங்களிடமிருந்து சாட்சியங்கள் பெறப்பட்டது.
அதற்கமைய, மேலதிக சாட்சியங்களுக்காக மீண்டும் இவ்வழக்கு எடுத்துக்கொள்ளவிருப்பதால், மீண்டும் நாளை (13) வரை அவருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அவருக்கு விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
Add new comment