நீதவான் தம்மிக ஹேமபால CCD யில் 3 மணி நேர வாக்குமூலம்
எம்பிலிபிட்டி மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டிய பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய, நீதிச் சேவை ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் அவர் பேசியதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல்களை அடுத்து அவர் இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நீதிச் சேவை ஆணைக்குழு அவர் தொடர்பிலான பரிந்துரையை ஜனாதிபதிக்கு கடந்த வாரம் அனுப்பி வைத்தைத் தொடர்ந்து ஜனாதிபதியினால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில், சட்டமா அதிபரின் உத்தரவுக்கமைய நீதிபதி கிஹான் பிலாபிட்டியிடமிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் கடந்த வாரம், பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள பத்தேகம நீதவான் தம்மிக ஹேமபால இன்று (21) பிற்பகல் கொழும்பு குற்றப் பிரிவில் சுமார் 3 மணி நேர வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து சென்றுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் நீதிபதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையீடு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என். ரணவக்க, மேல் நீதிமன்ற நீதிபதிகளான கிஹான் பிலபிட்டி மற்றும் தம்மிக ஹேமபால ஆகிய நீதிபதிகள் மூவரிடம் உடனடியாக வாக்குமூலம் பெறுமாறு கடந்த வியாழக்கிழமை (16) கொழும்பு குற்றப் பிரிவு பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
நேற்றையதினம் (20) முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக, கொழும்பு குற்றப் பிரிவில் (CCD) சுமார் 3 மணி நேர வாக்குமூல வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment