இலத்திரனியல் கொள்வனவு கொள்கையை தயாரிப்பது தொடர்பில் தேசிய பேரவை உப குழுவில் அவதானம்

இலத்திரனியல் கொள்வனவு கொள்கையை இந்நாட்டில் விரைவில் அறிமுகப்படுத்துவது தொடர்பில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் (11) கூடிய போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் நிதி அமைச்சு, தொழிநுட்ப அமைச்சு மற்றும் கணக்காய்வாளர் திணைக்களம் என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நாட்டின் அனைத்து அரச நிறுவனங்களிலும் கொள்வனவு முறையை இலத்திரனியல் மூலம் மேற்கொள்வதன் தேவைக்கமைய பாராளுமன்றம் ஊடாக கொள்கையொன்றை தயாரிப்பதன் அவசியம் தொடர்பில் உப குழுவின் தலைவர் நாமல் ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டினார். அதற்கமைய 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் கபினட் அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கு இலத்திரனியல் கொள்வனவு முறையை அறிமுகப்படுத்தவும், 2025 அளவில் நாட்டின் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இலத்திரனியல் கொள்வனவு முறையை அறிமுகப்படுத்தவும் எடுக்கக்கூடிய நடவடிக்கைள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னிஆரச்சி, விஜிர அபேவர்தன மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...