நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டங்கள் விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு பேரணிகள் நடத்தப்பட்டால், அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இவ்வாறு சட்டங்கள், விதிமுறைகளை மீறிச் செயற்படுதே பிரச்சினைகளுக்கு வழி வகுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களுக்கும் இதுவே காரணமென்றும் அவர் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், ஹேஷா விதானகே எம்பி எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டங்கள், விதிமுறைகளுக்கு இணங்கவே மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு அதனை மீறிச்செயற்பட முற்படுவது பல்வேறு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கின்றது. அவற்றை முறையாக பின்பற்றி ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு பேரணிகளை நடத்தினால் எவருக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. அவ்வாறின்றி செயல்பட்டால் சட்டத்தை பிரயோகிக்க நேரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
Add new comment