நடைமுறை விலைச் சூத்திரத்தின் படி டீசலின் விலையை குறைக்க முடியாது

மானியம் போன்ற தீர்மானங்களை நிதியமைச்சே மேற்கொள்ள வேண்டும்

சபையில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர

நடைமுறையில் உள்ள விலைச் சூத்திரத்தின் படி டீசலின் விலையை குறைக்க முடியாது எனவும் அதற்கான தீர்மானத்தை நிதியமைச்சே மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பெற்றோல் விலை குறைக்கப்பட்டாலும் டீசலின் விலையை உடனடியாக குறைக்க முடியாது என தெரிவித்த அவர்,  

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைவடைந்தாலும் தேசிய மட்டத்தில் எரிபொருள் விலையை தீர்மானிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

பெற்றோல் இறக்குமதியில் இலாபம் கிடைக்கப் பெற்றதால் விலை குறைக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போதைய நிலையில் டீசலின் விலையை குறைக்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்களின் போது எதிர்க்கட்சி எம்.பி காமினி வலபொட எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

நாட்டில் எரிபொருள் விநியோக கட்டமைப்பில் சிக்கல் காணப்படுகிறது என்பதை அனைவரும் அறிவர். மட்டுப்பாடுகளுக்கமையவே எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.விவசாயத்துறை நடவடிக்கைகளுக்கு திட்டமிட்ட வகையில் 70சதவீதமளவில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட மற்றும் பிரதேச செயலக பிரிவுகளின் ஒழுங்குபடுத்தலுக்கமைய விவசாயிகளுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றன. மசகு எண்ணெய் ஊடாக மாத்திரம் நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையினையும் பூர்த்தி செய்ய முடியாது.

மொத்த எரிபொருள் தேவையின் 30சதவீதமளவு மாத்திரம் தான் மசகு எண்ணெய் சுத்திரகரிப்பு ஊடாக பெற்றுக்கொள்ளப்படுகிறது.

70சதவீதமளவு எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவடையும் போது தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலையை குறைக்க முடியாது. டீசல் விநியோகத்தில் இதுவரை காலமும் வழங்கப்பட்ட நிவாரணம் நீக்கப்பட்டுள்ளது.

டீசல் விநியோகத்தின் நிவாரணம் நீக்கப்பட முன்னர் ஒரு லீற்றர் டீசல் விநியோகத்தின் போது 30ரூபா நட்டத்தை எதிர்கொள்ள நேரிட்டது.

இந்த நிலையில் தற்போது டீசலின் விலையை குறைக்க முடியாது.பெற்றோல் இறக்குமதியில் 70சதவீத இலாபத்தை பெற்றுக்கொண்டுள்ளதால் பெற்றோல் விலை குறைக்கப்பட்டது.

எதிர்வரும் 14 நாட்களுக்குள் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படும் போது தற்போதைய விலையில் திருத்தம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 


Add new comment

Or log in with...