சமூக நலன்புரி கொடுப்பனவு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிப்பு

- நாளை நிறைவுறும் முடிவுத் திகதி ஒக். 15 வரை நீடிப்பு
- சமூக நலன்புரி நன்மைகளை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை
- புதிய பதிவை மேற்கொள்ளாதோருக்கு நன்மைகள் கிடையாது

தகுதி வாய்ந்த நபர்களை இனங்கண்டு நன்மைகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தற்போது நன்மைகளை பெறும் எந்தவொரு தரப்பினரும் நன்மைகளை இழக்கும் அபாயம் இல்லை என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நன்மைகளை பெற்றுக்கொள்ளும் முறைகளை நெறிப்படுத்துவதுடன் மேலும் நன்மைகளை பெற்றுக்கொள்ள வேண்டிய தரப்பினரை அடையாளம் காண்பதே இதன் மூலம் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்த சூழ்நிலையிலும் சமூகநலன்புரி நன்மைகளை குறைக்க அரசாங்கம் தயாராக இல்லை என்றும் சேமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

அதற்கமைய, சமூக நலன்புரி கொடுப்பனவை வழங்குவதற்கு பொருத்தமான நபர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை கோரும் திகதி நாளையுடன் (30) முடிவடையவிருந்த நிலையில் அது தற்போது ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சமுர்த்தி, முதியோர், ஊனமுற்றோர், சிறுநீரக நோய்  உதவித்தொகை உள்ளிட்ட உதவித் தொகைகளைப் பெறும் அனைத்து பயனாளிகள், காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்கள், கொடுப்பனவுகளை எதிர்பார்க்கும் அனைத்து நபர்களும் இந்த புதிய பதிவை முன்னெடுப்பது கட்டாயமாகும் என அவர் குறிப்பிட்டார்.

இதற்காக விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும் மாதிரி விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அந்தந்த பிரதேச செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும். 0112151481 எனும் இலக்கத்தின் ஊடாக அல்லது அரசாங்க தகவல் நிலையத்தை 1919 எனும் இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெறலாம்.

இந்தத் திட்டத்தில் பதிவு செய்யத் தவறினால், நலன்புரி நன்மைகள் சட்டத்தின் பிரிவு 7(1)ன் கீழ் எதிர்கால அரசாங்க நன்மைகளை இழக்க நேரிடுமென நிதியமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...