ஒமிக்ரோன் ஊடுருவியதையடுத்து தீவிர உஷார் நிலையில இந்தியா!

உலகமெங்கும் கொரோனா சற்று ஓய்ந்திருந்த நிலையில், தென்னாபிரிக்காவின் கோட்டங்க் மாகாணத்தில் ஜோனஸ்பெர்க் இல் முற்றிலும் மாறுபட்ட வகையில் தனித்துவமான, உருமாறிய கொரோனா வைரஸ் உருவாகியுள்ளது. இதுவரை 29 நாடுகளில் அது பரவி விட்டது.

உலக சுகாதார அமைப்பால் ‘ஒமிக்ரோன் வைரஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பற்றிய சில சந்தேகங்கள் நிலவுகின்றன. அதற்கான விளக்கங்களும் தெரிவிக்கப்படுகின்றன.

இது டெல்டா வகை கொரோனா வைரஸை விட வேகமாக பரவுமா என்ற வினா முக்கியமானது. கொட்டங்க் மாகாணத்தில் டெல்டா வைரஸை விட வேகமாக பரவி முதலாவது இடத்தை எட்டியுள்ளது. டெல்டா வைரஸ் போலவே இதன் தாக்கம் பல மாதங்களுக்கு முன்பே பரவத் தொடங்கி உள்ளது.

ஒமிக்ரோன் மற்றொரு அலையா? இதற்கான சாத்தியக்கூறு அதிகமாக இருப்பினும், இறப்புகள் பற்றி இன்னும் தகவல்கள் வெளியிடப்படவில்லை. இதுவரை பதிவாகியுள்ள தகவலின்படி நோய்த்தொற்றின் பாதிப்பு குறைவாக உள்ளது. அந்த மாகாணத்தில் ஒமிக்ரோன் வைரஸால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில், இறப்பவரின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவே உயர்ந்து உள்ளது.

இதுவரை குழந்தைகளிடம் இருந்து இத்தொற்று கண்டறியப்படவில்லை. தொற்றுக்கான அறிகுறிகள் இவைதான்:

தீவிர சோர்வு, தசை வலி, தொண்டை அரிப்பு, வரட்டு இருமல் என அதிகளவிலும் ஒருசிலருக்கு அதிகளவில் காய்ச்சலும் தென்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டவர்களுக்கும் இத்தொற்று பரவுகிறது. எனினும் தடுப்பூசிகள் அனைத்து மாறுபட்ட தீவிர கொரோனா தொற்று நோயிலிருந்தும், இறப்பிலிருந்தும் பாதுகாக்கிறது. கொரோனா அலைகளில் கடைப்பிடித்தது போல, விமான போக்குவரத்து மூலம் வெளிநாட்டவர் வருகையை கண்காணிப்பது, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல், பொது இடங்களில் கூட்டமாக கூடுவதை தவிர்த்து தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற நடவடிக்கைகளை செயல்படுத்துவது நல்லது.

ஒமிக்ரோன் சிகிச்சை முறையில் தற்போது கடைப்பிடிக்கப்படும் மருத்துவ நடவடிக்கைகளே தொடரும் நிலை உள்ளது.

பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படுமா?

தடுப்பூசி போட்ட பிறகும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால், அது திருப்புமுனை தொற்று எனப்படும். பூஸ்டர் டோஸ்கள் செலுத்திக் கொள்வதால் அதிக அளவிலான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இது நோய்க்கு எதிராகவும், பரவும் தன்மைக்கு எதிராகவும் பாதுகாப்பாக இருக்கும்.

முதல் நிலை, இரண்டாம் நிலை தடுப்பூசி செலுத்தியவர்கள், அடுத்த நிலை பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வது பாதுகாப்பானது என்கிறார்கள் சர்வதேச மருத்துவ நிபுணர்கள்.

இதேவேளை இந்தியாவிலும் நேற்றுமுன்தினம் ஒமிக்ரோன் புகுந்து விட்டது. கர்நாடகாவில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். புதிய ஒமிக்ரோன் பாதிப்பு குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம். ஆனால் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

தமிழகத்திலும் ஒமிக்ரோன் பாதிப்பு வந்துள்ளதாக சிலர் வதந்திகளைப் பரப்பி விடுகின்றனர். இது பீதியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.

ஒமிக்ரோன் பாதிப்பு தமிழகத்தில் வராமல் தடுக்க முழு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் கூடுதல் உஷாராக இருக்குமாறு பணித்துள்ளோம். வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.ஒமிக்ரோன் வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட வேண்டியது இல்லை. ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதனைத்தான் மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர் என்றார் அவர்.

திருச்சியிலும், சென்னையிலும் ஒமிக்ரோன் வந்து விட்டதாக தவறான தகவல் பரப்பி விடப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து வந்த ஒருவருக்கு கொவிட் பொசிட்டிவ் வந்துள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு மரபியல் ரீதியிலான சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளோம். தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றார் சுப்பிரமணியன்.

தென்னாபிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் பரவி வந்த, 'ஒமிக்ரோன்' எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நுழைந்துள்ளது. கர்நாடகாவில் இரண்டு பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது நேற்றுமுன்தினம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 'கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்' என, மாநில அரசுகளை மத்திய சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாவது அலை தாக்கத்திலிருந்து உலக நாடுகள் மீண்டு வரும் நிலையில், உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தென்னாபிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது.

பீதி வேண்டாம்:

ஒமிக்ரோன் பரவலை தடுக்க இந்தியாவிலும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒமிக்ரோன் பரவியுள்ள நாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு, விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என, ராஜ்யசபாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒமைக்ரான் வைரசால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளது நேற்று உறுதி செய்யப்பட்டது. இது குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலர் லாவ் அகர்வால் கூறியதாவது:

கர்நாடக மாநிலம் பெங்களூரில், 66 மற்றும் 46 வயதான ஆண்கள் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இருவருக்கும் சார்ஸ் மரபணு பரிசோதனை ஆய்வகத்தின் மூலம் நடத்தப்பட்ட போது, அவர்களுக்கு ஒமிக்ரோன் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு இலேசான அறிகுறி மட்டுமே தென்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒமிக்ரோன் வைரசால் இருவர் பாதிக்கப்பட்டு உள்ளதால், யாரும் பீதிஅடைய தேவையில்லை. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அனைவரும் பொறுப்புடன் நடந்து கொண்டால் போதும்; தொற்று பரவலை தடுத்து விடலாம்.

இந்த வைரசின் தன்மை பற்றி இப்போது எதுவும் கூற முடியாது. எனினும் இந்த வைரஸ், இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடகாவில் ஒமெக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட இருவரின் முழு விபரம் தெரியவில்லை. இதில், 66 வயதானவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர். அவர் தென் ஆபிரிக்காவிலிருந்து வந்துள்ளார்.

மற்றொருவர், பெங்களூரில் டொக்டராக பணியாற்றுபவர் என தெரிய வந்துள்ளது. இவருடன் தொடர்பில் இருந்த ஐந்து டொக்டர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த மற்றவர்களை கண்டறியும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் கொரோனா பரவலை தடுக்க, வெளிநாட்டு பயணியருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு தனியாக வெளியிட்டிருந்தது. மத்திய உள்துறை அமைச்சகம், மஹாராஷ்டிர அரசுக்கு எழுதிய கடிதத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றும்படி அறிவுறுத்தியது.

இதையடுத்து, வழிகாட்டு நெறிமுறைகளில் மாற்றம் செய்து மஹாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் 275 படுக்கைகள் தயார்:

தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் ஒமிக்ரோன் வைரசை தடுக்க தேவையாக இருக்கும் முக்கிய மருந்துகள், ஒக்சிஜன் வசதிகள், முகக்கவசங்கள் போன்றவை மூன்று மாதங்களுக்கு தேவையான அளவு கையிருப்பில் உள்ளன. இந்த வைரஸ் பரவினால், அதை எதிர்கொள்ள பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, வைரஸ் பாதிப்புக்குள்ளாகும் நபர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளிலும் தலா 150 படுக்கைகள் ஒதுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

தற்போது சென்னையில் ராஜிவ்காந்தி மருத்துவமனையில் 150, ஸ்டான்லியில் 75, ஓமந்தூரர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 50 படுக்கைகள் என 275 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.கிண்டி கொரோனா மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் கொரோனா படுக்கைகள் காலியாக இருப்பதால், தேவைப்படும் நேரங்களில் அவை ஒமிக்ரோன் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தி கொள்ளப்படும். அதேபோல், அனைத்து மாவட்டங்களிலும் படுக்கைகள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

24 நாடுகளுக்கு பரவல்:

ஒமிக்ரோன் வகை கொரோனா வைரஸ் தென்னாபிரிக்காவில் கடந்த மாதம் 8ம் திகதி முதலில் கண்டறியப்பட்டது. கடந்த வாரம் இந்த வைரஸ் குறித்து உலக நாடுகளுக்கு எச்சரிக்கப்பட்டது.

இதுவரை இருந்த கொரோனா வைரஸ் வகைகளிலேயே இதுதான் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.

தென்னாபிரிக்காவில் ஒவ்வொரு நாளும் பாதிப்பு, அதற்கு முந்தைய நாளை விட இரட்டிப்பாகி வருகிறது. இதற்கிடையே, இந்த வகை வைரஸ் 24 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.