வழிபாட்டுத் தலங்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய கண்டிப்பான நடைமுறைகள்

வழிபாட்டுத் தலங்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய கண்டிப்பான நடைமுறைகள்-Religious Places-Health Guidelines

வழிபாட்டுத் தலங்களில் சமய நிகழ்வுகளை நடத்த அனுமதி அளித்து புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, கோவில்கள், பள்ளிவாசல்கள், விகாரைகளில் வாராந்தம் மற்றும் ஏனைய விசேட நிகழ்வுகளுக்கு மாத்திரம், உச்சபட்சமாக 50 பக்தர்கள் பங்கேற் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தனவினால் இவ்வனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, திருமண விழாக்கள் மற்றும் பிற நிகழ்வுகளின் போது சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவது குறித்து தங்களுக்கு பல முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு திருமணத்தில் 50 பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறிருக்க சில மண்டபங்களில் 150, 200 மற்றும் 300 விருந்தினர்கள் கூட இரவில் தங்கியிருந்து திருமணங்களை நடத்தியதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மத உற்சவங்களில் பங்குபற்றுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை வைத்து மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

அதற்கிணங்க வழிபாட்டுத் தலங்களில் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும் தினங்களில் மாத்திரம் 50 பேர் பங்கு பற்றலாம் என்றும் ஏனைய தினங்களில் தனித் தனியே சென்று சமய நடவடிக்கைகளில் பங்கேற்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 50 பேர் மாத்திரம் உற்சவங்களில் கலந்து கொள்ள முடியும் என்றும் திறந்த வெளிகளில் உற்சவங்களில் 75 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறி உற்சவங்களும் திருமண நிகழ்வுகளும் நடைபெறுவதாக முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில ஹோட்டல்களில் நடக்கும் நிகழ்வுகளில் 300 பேர் வரை கலந்து கொள்வது, முகக் கவசங்களை அணியாமல் ஆடிப்பாடி செயற்படுவதை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜும்ஆத் தொழுகை:
அனைத்து பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு ஜும்ஆத் தொழுகைக்காக மாத்திரம் வரையறுக்கப்பட்ட அனுமதி வழங்கல் தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றுநிருபம் இலங்கை வக்பு சபையின் பணிப்புரைக்கமைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ஐ. அன்ஸாரின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளரின் DGHS Covid-19/347/2021 ஆம் இலக்க 21.10.2021 ஆம் திகதிய கடிதம் மூலம் வழங்கப்பட்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஒப்புதலின் பிரகாரம், பள்ளிவாசல்களில் கூட்டு செயற்பாடான ஜும்ஆத் தொழுகையினை மாத்திரம் நடத்துவதற்கு பின்வரும் கட்டாய நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் பிரகாரம் இலங்கை வக்பு சபை அனுமதியினை வழங்குகின்றது.

  1. இந்த அனுமதியானது ஜும்ஆத் தொழுகைக்காக மாத்திரம் கண்டிப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு பள்ளிவாசலிலும் இதற்காக எல்லா நேரத்திலும் கலந்து கொள்ளக் கூடிய அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை 50 ஆகும்.
  2. தொழுகையின் ஒரே ஒரு அமர்வு (வக்து) மாத்திரமே அனுமதிக்கப்படுகிறது.
  3. ஒரு வரிசை இடைவெளி விட்டு (ஒவ்வொரு மற்ற வரிசையிலும்) தொழுகைகள் நடத்தப்பட வேண்டும்.
  4. முகக்கவசம் அணிதல், 1 மீற்றர் இடைவெளி பேணல், சொந்தமான தொழுகை விரிப்பினை எடுத்து வருதல் மற்றும் வீட்டிலிருந்து வுழூ செய்து கொண்டு வருதல் என்பன கட்டாயமானதாகும்.
  5. சுகாதார பாதுகாப்பு தரப்பினரின் ஏனைய அனைத்து விதிமுறைகள், வழிகாட்டல்கள் மற்றும் வக்பு சபையின் முன்னைய வழிகாட்டுதல்கள் மிகவும் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
  6. வேறு எந்த கூட்டு வணக்க வழிபாடுகள் அல்லது செயற்பாடுகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அதன் பிரகாரம் எந்தவொரு பள்ளிவாசலிலும் ஏனைய தொழுகைகள், குர்ஆன் மஜ்லிஸ், நிகாஹ் மஜ்லிஸ் போன்றவைகளுக்கு இந்த ஒப்புதல், அனுமதியானது நீக்கப்பட மாட்டாது.
  7. பள்ளிவாசல்களில் ஏனைய அனைத்து தொழுகைகளையும் தனியாக தொழுவதற்கு மாத்திரம் எல்லா நேரத்திலும் 25 நபர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
  8. பள்ளிவாசல்களில் உள்ள வுழூச் செய்யும் பகுதி மற்றும் கழிப்பறைகள் என்பன மூடப்பட்டிருத்தல் வேண்டும்.
  9. தனிமைப்படுத்தப்பட்டதாக அல்லது மட்டுப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்கள் அவ்வாறான தனிமைப்படுத்தல் மட்டுப்படுத்தல் காலம் வரை தொடர்ந்தும் மூடப்பட்டிருத்தல் வேண்டும்.
  10. மேற்குறிப்பட்ட நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்றுவது நடைமுறைச் சாத்தியமில்லை என கருதும் நம்பிக்கையாளர்கள்/ பொறுப்பாளர்கள் ஜும்ஆத் தொழுகையை நடத்தாமல் விடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
  11. மேலுள்ள அல்லது ஏனைய கொவிட் 19 வழிகாட்டுதல்களில் ஏதேனும் மீறல்கள் இடம்பெற்றால் நம்பிக்கையாளர்கள் அல்லது பொறுப்பாளர்கள் மிகக் கண்டிப்பாக பொறுப்பேற்க வேண்டும் என்பதுடன், அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.