தெற்காசிய நாடுகளில் கொவிட்–19 நோய்த்தொற்று அதிகரித்து வருவதால், அங்கிருந்து வரும் பயணிகளுக்கு மாலைதீவு தடைவிதித்துள்ளது.
உள்நாட்டில் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வந்தாலும், பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்த முடிவை மாலைதீவு எடுத்துள்ளது.
பயணத்துறையை அதிகம் சார்ந்துள்ள மாலைதீவில் கடந்த வாரம் மட்டும் கொரோனா நோய்த்தொற்று 15 மடங்கு அதிகரித்தது.
ஒரு நாளுக்கு 100க்கும் குறைவான புதிய நோய்த்தொற்று சம்பவங்களை எதிர்நோக்கிய அந்நாட்டில், இப்போது ஒரு நாளைக்கு 1500 புதிய நோய்த்தொற்று சம்பவங்கள் அடையாளம் காணப்படுகின்றன.
பயணத் தடை, நேற்று வியாழக்கிழமை முதல் நடப்புக்கு வந்தது. ஆப்கனிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்குத் தடை பொருந்தும்.
அண்மைக் காலமாக, மாலைதீவுக்கு இந்தியர்கள் அதிகம் சென்று வந்தனர். பிரபல திரைப்பட நட்சத்திரங்கள் பலர் அங்கு சென்றதால், அவர்களைப் பார்த்து ரசிகர்கள் பலரும் அந்நாட்டிற்குச் சென்றனர்.
Add new comment