கொழும்பின் கிராண்ட்பாஸ் பகுதியிலுள்ள கஜீமா வத்த பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் சுமார் 50 சேரி வீடுகள் எரிந்து நாமாகியுள்ளன.
இன்று (15) அதிகாலை 2.40 மணியளவில் குறித்த தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் தகடுகள், பலகைகளால் கட்டப்பட்ட சுமார் 50 தற்காலிக சேரி வீடுகளே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் இவ்வாறான சுமார் 250 வீடுகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயணைப்பு படையினருடன் இணைந்து பொலிஸார், பிரதேசவாசிகள் இணைந்து தீயை முற்றாக கட்டுப்படுத்திய போதிலும், அனைத்து வீடுகளும் இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்தில் எவ்வித உயிரிழப்போ, எவருக்கும் காயமோ ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விஜயம் செய்து நிலைமைகளை கேட்டறிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
திடீரென இவ்வாறு தீ பரவியதாக தெரிவிக்கின்ற பிரதேசவாசிகள், தீயை அணைக்க எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்காத நிலையில் ஓரிரு நிமிடங்களில் அனைத்து வீடுகளுக்கும் தீ பரவியதாக தெரிவிக்கின்றனர்.
கிராண்ட்பாஸ் பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தீப்பிடித்த பெரும்பாலான வீடுகள் அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்டவை என்றும் அவை பலகைகள் மற்றும் தகடுகளால் கட்டப்பட்டவை என்றும் பொலிசார் தெரிவித்தனர்.
இது குறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஊடாக, அரச பகுப்பாய்வாளருக்கு தகவல் அளிக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Add new comment