சுற்றுலாத்துறையின் புதிய பயணத்திற்கு தயாராகுங்கள்

- சுற்றுலாத்துறை தொழில் முயற்சியாளர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

தற்போதுள்ள கோவிட் -19 நிலைமைகளுக்கு மத்தியில் பொது மக்கள் பாதுகாப்புக்கு விதிக்கப்பட்டுள்ள சுகாதார கட்டுப்பாடுகளைத் தவிர சுற்றுலாப் பயணிகளுக்கு அனைத்து வசதிகளையும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுற்றுலாத்துறை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய இலக்காக இருப்பதால், சவால்களை வெற்றிகொண்டு இந்த தொழிற்துறையின் ஒரு புதிய பயணத்திற்கு தயாராகுங்களென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுற்றுலா தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள தொழில்முயற்சியாளர்களிடம் தெரிவித்தார்.

சுற்றுலாத் துறை அபிவிருத்தி தொடர்பில் (17) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை தெரிவித்தார். இத்துறை சார்ந்த நிறுவனங்களின் தலைவர்களும், இந்தத் துறையிலுள்ள முன்னணி தொழில்முயற்சியாளர்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

கோவிட் 19 தடுப்பூசி வழங்குவதில் ஹோட்டல் ஊழியர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் ஓட்டுநர்கள் போன்ற ஊழியர்களுக்கும் முன்னுரிமை அளிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் தொற்றுக்குள்ளாகாத போது, வசதிகளை வழங்குவோர் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லையென்று முன்மொழியப்பட்டது.

நோய்த்தொற்றுக்குள்ளான சுற்றுலாப் பயணிகளை லங்கா ஹொஸ்பிட்டல் மற்றும் கொக்கலவில் இலங்கை இராணுவத்தினால் நடத்தப்படும் மருத்துவமனைக்கும் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலாத் திட்டத்தின் படி சுற்றுலாப் பயணிகளை வழிநடத்துவதில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


Add new comment

Or log in with...