"தேர்தலில் மோசடி; உச்ச நீதிமன்றம் செல்லவுள்ளேன்"

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள டொனால்ட் ட்ரம்ப்,  வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவதற்காக உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிகளவான வாக்குகளை பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். டொனால்ட் ட்ரம்ப் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார்.  இந்நிலையில், தேர்தல் நிலவரம் தொடர்பாக டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் உரையாற்றியபோதே, மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, நாம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறோம். தேர்தலில் மகத்தான ஆதரவு அளித்த அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

ஜோர்ஜியா, டெக்சாஸ் உள்ளிட்ட மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளோம். பென்சில்வேனியா, மிச்சிகன், விஸ்கான்சின் மாநிலங்களிலும் வெற்றி கிடைக்கும். ஆனால், முடிவுகள் வெளியாகுவதில் தாமதம் செய்கின்றனர்.

இத்தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. எதிர்க்கட்சியினர் வெற்றியை திருடப் பார்க்கிறார்கள். தேர்தலுக்குப் பின்னரும் வாக்களிக்க முயற்சி நடக்கிறது. இதனை தடுக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவதற்காக உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம் எனவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பென்சில்வேனியா உள்ளிட்ட 3 முக்கியமான மாநிலங்களில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் உள்ளார். இழுபறியில் உள்ள இம்மாநிலங்களில் முடிவுகள் வெளியாகவில்லை. ஆனால் தபால் வாக்குகளை எண்ண ஆரம்பித்தால், டொனால் ட்ரம்ப் பின்னடைவை சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...