மர்மமான முறையில் மரணித்த மாணவி

ஆற்றுக்குள்ளிருந்து சடலம் மீட்பு

நானுஓயாவில் மர்மமான முறையில் உயிரிழந்த 15 வயது மாணவியின் சடலம் ஆற்றுக்குள்ளிருந்து நேற்று (29) மீட்கப்பட்டுள்ளது.

நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயின்ற - டெஸ்போட் தோட்ட கீழ்பிரிவில் வசித்த மகேந்திரன் யசோதா என்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். "மகள் திங்கள் இரவு (28) 10.30 மணிவரை கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். நாம் நித்திரைக்கு சென்றுவிட்டோம். பின்னர் அதிகாலை 2.30 மணியளவில் எழுந்துபார்க்கும் போது மகளை காணவில்லை. இதனையடுத்து தேட ஆரம்பித்தோம்." என யசோதாவின் தாயார் நானுஓயா பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார். காலையில் ஊர் மக்களும் இணைந்து தேட ஆரம்பித்தனர். இந்நிலையில் நேற்று (29) காலை தோட்டத்தொழிலாளர்கள் சிலர் கொழுந்து பறிப்பதற்காக சென்றுக்கொண்டிருந்த போது வீட்டுக்கு அருகிலுள்ள ஆற்றில் யசோதா சடலமாக கிடப்பதை கண்டு அறிவித்துள்ளனர். நுவரெலியா மாவட்ட நீதிபதி மரண விசாரணைகளை மேற்கொண்ட பின், பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஹற்றன் சுழற்சி,ஹற்றன் விசேட, தலவாக்கலை குறூப் நிருபர்கள்


Add new comment

Or log in with...