தேர்தலுக்கு முன்னர் MCC ஒப்பந்தம் குறித்த தீர்மானம்

 ஜனாதிபதியே இறுதி முடிவினை எடுப்பார் என்கிறார் ஜீ.எல். பீரிஸ்

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் MCC ஒப்பந்தம் தொடர்பில் உரிய தீர்மானம் எடுக்கப்படும்.ஆனால் ஜனாதிபதியே இறுதி தீர்மானத்தை எடுப்பார். ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கும், நிராகரிப்பதற்கும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு அவசியமற்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து MCC ஒப்பந்தம் தொடர்பில் இரகசிய தன்மையை பேணியது.

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒப்பந்தத்தின் முதலிரு பகுதிகள் கைச்சாத்திடப்பட்டு அதற்கான ஆரம்பகட்ட நிதியும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இவ்விடயங்கள் ஏதும் அக்காலக் கட்டத்தில் பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் பேசப்படவில்லை. M.C.C. ஒப்பந்தம் தொடர்பில் ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த ஜனவரி மாதம் நால்வர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.

குழுவினர் மீளாய்வு அறிக்கையை கடந்த வெள்ளிக்கிழமை (25 ) ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருந்தார்கள். மீளாய்வு அறிக்கையினை மக்கள் முழுமையாக அறிந்துக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டதற்கு இணங்க மீளாய்வு அறிக்கை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

M.C.C. ஒப்பந்தம் தொடர்பிலான தகவல்களை மறைக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஒப்பந்தம் தொடர்பில் உரிய தீர்மானம் எடுக்கப்படும். ஒப்பந்தை கைச்சாத்திடவும், நிராகரிக்கவும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு ஒன்றும் அவசியமில்லை. ஜனாதிபதியே இறுதி தீர்மானத்தை எடுப்பார்.


Add new comment

Or log in with...