மேலும் 45 பேர் உள்ளிட்ட 608 கடற்படையினர் குணமடைவு

கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 45 கடற்படையினர் பூரண குணமடைந்து, வைத்தியசாலைகளிலிருந்து நேற்று (09) வெளியேறியுள்ளனர்.

இவர்களில் 35 பேர் கடற்படை வைத்தியசாலையிலும், 10 பேர் ஹோமாகம வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். குறித்த வைத்தியசாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகளுக்கு அமைய, குறித்த வைரஸ் தொற்று அவர்களது உடலில் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து நேற்று வைத்தியசாலைகளிலிருந்து அவர்கள் வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி கொவிட்-19 தொற்றினால் குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 608ஆக உயர்வடைந்துள்ளதாகவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகின்றது.


Add new comment

Or log in with...