கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழாவிற்கான கொடியேற்றம் ஜூலை மாதம் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் தீமிதிப்பு 31ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் நடைபெறும்.
ஆடிவேல்விழா உற்சவத்தின் இறுதி மகாபெரஹரா ஊர்வலம் ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளதுடன் தீர்த்தோற்சவம் மறுநாள் 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை நடைபெறும்.
கதிர்காமம் ஆடிவேல்விழா உற்சவத்திற்கான கன்னிக்கால் நடும் வைபவம் (6)சனிக்கிழமை காலை ஆலயத்தில் நடைபெற்றது.
கன்னிக்கால் நடப்பட்டு 45 தினங்களின் பின்னர் கொடியேற்றம் நடைபெறுவதும் அதுபோல கொடியேற்றம் நடைபெற்று 15 தினங்களில் தீர்த்தோற்சவம் நடைபெறுவதும் பாரம்பரிய வழக்கமான நடைமுறைகளாகும். எனினும் சமகால கொரோனா தொற்றுச் சூழலில் ஆலய ஆடிவேல்விழா உற்சவம் எவ்வாறான நடைமுறைகளில் நடத்தப்படுமென்பது தொடர்பான இறுதிமுடிவு மொனராகலை மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெறவிருக்கும் பிரதான கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.
இது குறித்த தீர்மானம் மொனராகலை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் திணைக்களத் தலைமைகளுடன் நடத்தப்படும் பிரதான கூட்டத்தில் தீர்மானிக்கப்படுவது வழக்கம். அங்குதான் காட்டுப்பாதை திறக்கப்படுவது குறித்தும் அறிவிக்கப்படும்.
காரைதீவு நிருபர்
Add new comment