மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி; மூவர் காயம்

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலங்கை துறை முகத்துவாரம் பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதோடு, மூவர் படுகாயமடைந்துள்ளதாக,  பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து நேற்று  (04) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி இவ்விபத்து சம்பவித்துள்ளது.

தாய், தந்தை, 06 மாதக் குழந்தை பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன், மற்றுமொரு மோட்டார்  சைக்கிள் மோதியதில், 06 மாதக் குழந்தையும் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞரும் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு, 06 மாதக் குழந்தையின் தந்தையான சேருநுவர,  இலங்கை துறை முகத்துவாரம், மத்திய வீதியைச் சேர்ந்த துஸேந்தனும், அவரது மனைவி து.டிலக்ஸனாவும் மற்றும்  மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த கே.மயூரன் (17) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த ஈச்சிலம்பற்று, புன்னையடியைச் சேர்ந்த வர்ணகுமார் டிலக்சன் (17) என்பவருடைய  சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கவுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு, 06 மாதக் குழந்தையான கன்சிகாவின் சடலம் தற்பொழுது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்

(ரொட்டவெவ குறூப் நிருபர் -அப்துல்சலாம் யாசீம்)


Add new comment

Or log in with...