பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் மார்ச் 11ஆம் திகதி இணையத்தளத்தில் ​வௌியிடப்படும்

தகைமைபெற்றுள்ள பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் மார்ச் 11ஆம் திகதி பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவி வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தொழிலை எதிர்பார்த்துள்ள பட்டதாரிகளை தொழிலில் அமர்த்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தகைமை பெற்றுள்ள அனைவருக்குமான நியமனக் கடிதங்கள் தற்போது தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்காக தகைமைப்பெற்றுள்ள அனைவரினதும் பெயர் விபரங்கள் மார்ச் 11ஆம் திகதி பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்படும்.

நியமனக் கடிதங்கள் கிடைப்பது தாமதமாவதையிட்டு அச்சமடையத் தேவையில்லை என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

நியமனம் கிடைக்கப்பெற்று 03 தினங்களுக்குள் தமது பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு அறிக்கையிட வேண்டுமென நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் இதுவரை நியமனக் கடிதங்கள் கிடைக்கப்பெறாதவர்கள் அது குறித்து ஐயப்படத் தேவையில்லை.

தற்போது நியமனக் கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளவர்கள் பிரதேச செயலாளருக்கு அறிக்கையிட வேண்டும். அவர்களது வருகையை பிரதேச செயலாளர் பதிவு செய்வார். “கடிதம் கிடைக்கப்பெற்று 07 நாட்களுக்குள் பயிற்சிக்கு சமூகமளிக்காதவர்கள் அந்நியமனங்களை நிராகரித்ததாக கருதப்படும்”என குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதுவும் செல்லுபடியானதாக கொள்ளப்பட மாட்டாதென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களுக்கேற்ப பொதுத் தேர்தல் நடைபெற்று ஐந்து தினங்களுக்குப் பின்னர் பட்டதாரிகளுக்கான பயிற்சிகள் ஆரம்பிக்கப்படும். அதுபற்றி பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள். மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்படும்.

விண்ணப்பங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்த உறுதிப்படுத்தப்பட வேண்டிய பட்ட மற்றும் டிப்ளோமா சான்றிதழ்களை உறுதிப்படுத்துவதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதற்காக நீண்டகாலம் செலவாகின. மிகவும் வெளிப்படைத் தன்மையுடனும் நியாயமான முறையிலும் பட்டதாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகரித்த உள்நாட்டு,

வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகள் இதற்காக விண்ணப்பித்திருந்தனர். அறிவிக்கப்பட்ட தகைமைகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதன் பின்னர் 45,585 பேர் நியமனத்திற்காக தகைமை பெற்றுள்ளனர்.


Add new comment

Or log in with...